×

அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்: பாஜவுடன் கூட்டணி வைத்ததால் முடிவு

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மையில் அதிமுக-பாஜ கூட்டணி உறுதியானது. சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி முறிந்திருந்த நிலையில் மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது. பாஜவுடனான கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த எஸ்டிபிஐ கட்சிக்கு 1 இடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள். இப்போது முழக்கம் எங்கே போனது. அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜவுடன் சேர்ந்தால் அழிவு பாஜவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் எந்த எல்லைக்கும் போவார்கள், அந்த அடிப்படையில் அதிமுகவை கபளீகரம் செய்திருக்கிறார்கள்.

பாஜவை பொறுத்தவரை தமக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தமக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜ அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநில கட்சிகளுடன் அழிந்துபோனதாகத்தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை. தனிமைப்படுத்த வேண்டும். பாஜவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள். எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னலாவது திறக்காதா என பாஜ தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

அதிமுக – பாஜ கூட்டணியில் இருந்து தங்களை விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜவை வெறுக்கிறார்கள். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும். பாஜவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. பாஜ கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது. இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவுடன் கூட்டணியா, இல்லையா என்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் செயற்குழுவை கூட்டி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

The post அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்: பாஜவுடன் கூட்டணி வைத்ததால் முடிவு appeared first on Dinakaran.

Tags : STBI ,AIADMK ,BJP ,Chennai ,general secretary ,Tamil Nadu Assembly ,AIADMK- ,Home Minister ,Chennai… ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…