
சென்னை: கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர்பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பி.ஜெகநாத் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். அதற்கு தலைமை நீதிபதி, ஏற்கனவே பொன்முடி தனது வருத்ததை தெரிவித்துள்ளார். அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், அவர் அமைச்சராக நீடிக்கிறார். தான் இந்த மனு மீது வாதிடவுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
The post சைவம், வைணவம் குறித்து பேச்சு; அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை appeared first on Dinakaran.
