
சென்னை: ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹஜ் புனிதப் பயணத்திற்கு தயாராகி வரும் தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம் ஹஜ் பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.
இந்த அவசர மற்றும் கவலையளிக்கும் விஷயத்தை பிரதமர் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக் கடமையாகும். இந்த ஆண்டு, ஹஜ் பயணம் ஜூன் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமான மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள். கடந்த 2024ம் ஆண்டில், சுமார் 1,75,000 இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றதாகவும், இதற்காக கடந்த ஜனவரி மாதம் இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1,75,025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது என்றும்,
இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2025ம் ஆண்டுக்கான மாநில ஹஜ் குழுக்களுக்கு 1,22,517 இடங்களும், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகத் தாம் அறிய வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 52,000 ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது என்று தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வினைப் பெறவேண்டும், பிரதமரின் தலையீடு, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டு வந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும் என்றும் தாம் உறுதியாக நம்புவதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post ஹஜ் பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் appeared first on Dinakaran.
