×

ராம நவமியன்று இந்து மக்கள் கட்சி நடத்தவுள்ள ராம ரத யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: இந்து மக்கள் கட்சி தரப்பில் ராமநவமி தினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் ெதரிவித்துள்ளது. ராம நவமி தினத்தையொட்டி வரும் ஏப்ரல் 6ம் தேதி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்து மக்கள் கட்சி சார்பில், வரும் ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் ராம ரத யாத்திரை சிறப்பு பூஜையுடன் சேலம் அயோத்தியாபட்டினத்தில் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சென்று, சவுந்தரராஜா பெருமாள் கோயிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைகிறது.

இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு, காவல்துறை ஆகியோருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.

The post ராம நவமியன்று இந்து மக்கள் கட்சி நடத்தவுள்ள ராம ரத யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Ram ,Hindu Makkal Katchi ,Madras High Court ,Chennai ,Hindu Makkal ,Salem, Ayodhyapatnam ,Ram Navami… ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...