சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது, கார் உரிமங்கள் வழங்கியது போன்றவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகமும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில் சோதனை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமாக உள்ளது என அறிவிக்க வேண்டும் என்றும் அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனையை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட கோரியும் அந்த மனுவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்திகுமார் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தினம் தள்ளி வைத்திருந்தது. அத்துடன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதிகள் இருவரும் அறிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மாற்று அமர்வது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.
