குன்னூர் : குன்னூர் அருகே காலில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டுமாட்டிற்கு வனத்துறையினர் முதற்கட்ட மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளனர். நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளதால், இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், கடந்த மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மலை தோட்ட காய்கறிகள், தேயிலை பயிர்கள் பாதிப்படைந்தது.
அது மட்டுமின்றி வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து கருகியது. தற்போது, கோடை காலம் நெருங்கி வருவதால், வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
இதனால் குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்பை நோக்கி படையெடுத்து வருகின்றன. மேலும், குடியிருப்பில் உலா வரும் காட்டுமாடுகள் சில சமயங்களில் பள்ளத்திலிருந்து விழுந்து காயமும் அடைகிறது. இதுதவிர, தடுப்பு வேலிகளிலும் சிக்கிக் கொள்கிறது. இதனிடையே குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் காட்டுமாடு ஒன்று, காலில் காயத்துடன் கடந்த இரண்டு நாட்களாக சுற்றி வருவதாகவும் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக குன்னூர் வனசரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில் வனத்துறையினர் அந்த அந்தக் காட்டுமாட்டை கண்காணித்து வந்தனர்.
காட்டுமாடு இருக்கும் இடத்தை அறிந்த வனத்துறையினர் நேற்று முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷை வரவழைத்து காட்டு மாட்டிற்கு சிகிச்சை அளித்தனர்.
இதில், காயத்தை சரி செய்யும் வகையில் முதற்கட்டமாக காட்டுமாட்டிற்கு உணவில் மருந்து கலந்து கொடுக்கப்பட்டது.மேலும், காட்டுமாட்டை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த வனத்துறையினரின் இந்த சம்பவம் பொதுமக்களின் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
The post குன்னூர் அருகே காலில் காயத்துடன் திரியும் காட்டு மாட்டிற்கு மருத்துவ சிகிச்சை appeared first on Dinakaran.
