சான்ஜோஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அப்படி இதுவரை அங்கிருந்து 332 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட 299 பேர் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு அனுப்பப்பட்டனர். 3 விமானங்களில் அங்கு வந்துள்ளவர்களை பனாமா சிட்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்.
இதில் சிலரை அவர்களது நாட்டுக்கு அமெரிக்கா திரும்ப அனுப்புவதில் சிக்கல் இருப்பதால் பனாமாவை தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுபவர்களையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலமாக செயல்படுவோம் என பனாமா அதிபர் ஜோஸ் ராவுல் மவுலினோ தெரிவித்தார். இந்த நிலையில், நாடு கடத்தப்படுபவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு கோஸ்டா ரிக்கா, ஹோண்டுராசும் அனுமதி அளித்துள்ளன. சட்ட விரோத குடியேறிகள் 135 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்க விமானம் ஒன்று நேற்று கோஸ்டா ரிக்காவின் சான் ஜோஸ் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அதே போல் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனாமோ சிறையில் இருந்த வெனிசுலா நாட்டை சேர்ந்த 170 பேர் நேற்று விமானம் மூலம் ஹோண்டுராஸ் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். ஒரு சில மணி அங்கு தங்க வைக்கப்பட்ட பின்னர் விமானம் மூலம் வெனிசுலாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்களை தற்காலிகமாக தங்கவைக்க மேலும் 2 நாடுகள் சம்மதம் appeared first on Dinakaran.
