கிருஷ்ணகிரி: பள்ளி ஆசிரியரிடம் 3 சிறுவர்கள் டாஸ்மாக்கிற்கு வழி கேட்டு அவரை கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர். காஞ்சிபுரம் திருப்பதிகுன்றம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ராஜன் (57). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 18ம் தேதி இரவு கிருஷ்ணகிரி பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக டேவிட் ராஜன் வந்தார். பின்னர் நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு அவர் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள துணிக்கடை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த 3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை வழிமறித்துள்ளனர். பின்னர் டாஸ்மாக் கடைக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என அவரிடம் வழி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், நான் புதியதாக ஊருக்கு வந்துள்ளேன். இதனால் எனக்கு எங்கு இருக்கிறது என தெரியாது என்றார். மேலும் அவர், நீங்கள் சிறுவர்களாக உள்ளீர்கள். எதற்காக அங்கு செல்ல வேண்டும் என கேட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த 3 சிறுவர்களும் டேவிட் ராஜனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரை கீழே தள்ளி கற்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுபற்றி அவர் கிருஷ்ணகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், டேவிட் ராஜனை தாக்கியது ரயில்வே காலனியை சேர்ந்த 13, 15, 16 வயது சிறுவர்கள் என்பதும், அவர்கள் 3 பேரும் அவரை தாக்கும்போது மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சேலம் கூர்நோக்கு பள்ளியில் சேர்த்தனர். இந்தநிலையில், சிறுவர்கள் 3 பேரும் ஆசிரியர் டேவிட் ராஜனை கீழே தள்ளி கற்களை கொண்டு தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
The post டாஸ்மாக்கிற்கு வழி கேட்டு ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல்: 3 சிறுவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.
