திருவள்ளூர்: தொழுவூர் ஊராட்சியில் உள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் கடந்த சில நாட்களாக செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை உடனே அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் ஒன்றியம், தொழுவூர் ஊராட்சியில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்திருந்தன. நீரும் நிறைந்திருந்ததால் இதில் ஏராளமான மீன்கள் வளர்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் அழுகி குளத்து நீரும் மாசு அடைந்தது. இதனால் இந்த கோயில் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின.
கடந்த சில நாட்களில் குளம் முழுவதும் மீன்கள் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் குளத்தில் செத்துக்கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தொழுவூர் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.
