- வரமுக்தி ஈஸ்வரன் கோயில்
- Kumbabhishekam
- தண்டலம்
- பெரியபாளையம்
- வரமுக்தி ஈஸ்வரன் கௌரி சமேத ஆலயம்
- தண்டலம் கிராமம்
- கணபதி பூஜை
பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த தண்டலம் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வரமுக்தி ஈஸ்வரன் கவுரி சமேத கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் கடந்த 10ம்தேதி கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கங்கா பூஜை, சுப்பிரமணியர் பூஜை, வாஸ்து ஹோமம், சங்கல்பம், நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை, அஷ்டபந்தன பூர்ணாஹூதி, மூன்றாம் கால யாக பூஜைகள் முடிந்த பின்னர் தண்டலம் ஹரிஹரன் ஐயர் தலைமையிலான குழுவினர், யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை கொண்டு வந்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க தலையில் சுமந்து கோயில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கும், மூலவருக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
அப்போது, அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த மாரிமுத்து தலைமையில் அஜய், சவுந்தர், நந்தினி, சுரேஷ், திருவேஷ், செல்வம் மற்றும் தண்டலம் முனி ஆண்டவர் நகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post தண்டலம் கிராமத்தில் வரமுக்தி ஈஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.
