×

கில், ஸ்ரேயாஸ் ஆதரவால் சதம் சாத்தியமானது: ரோகித் உற்சாக பேட்டி

கட்டாக்:இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி 119 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ரோகித் சர்மா போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அதற்கான நேரம் நேற்று தான் கைகூடியது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி என்பதால், பேட்டிங்கை தொடங்கியபோது, களத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்பதை மட்டுமே நினைத்திருந்தேன்.

ஆனால் எப்படி பேட் செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே பிரித்து திட்டமிட்டேன். ஒருநாள் போட்டியின் நீளம் டி20 போட்டிகளை விட நீண்டது மற்றும் டெஸ்ட் போட்டிகளை விடக் குறைவு என்பதால் அதை பிரித்துப் பார்க்க விரும்பினேன். குறிப்பாக இங்கிலாந்து பவுலர்கள் என் உடலை நோக்கியும், ஸ்டம்புகளுக்கு குறி வைத்தும் பந்து வீசியபோது அவர்களின் மன ஓட்டத்தை நான் புரிந்து கொண்டேன். விக்கெட்டை பறிகொடுக்க கூடாது, அதே சமயம் சீராக ரன்களையும் குவிக்க வேண்டும் என்று எண்ணி எனது திட்டத்தை பயன்படுத்தினேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை பயன்படுத்தி ரன்கள் குவிக்க முயற்சித்தேன்.

மேலும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் தான் என்னால் பதட்டமின்றி எளிதாக ரன்கள் குவிக்க முடிந்தது. எனக்கு கில்லுடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது மிகவும் பிடிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதால் கில் ஒரு கிளாஸிக் வீரர். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை மிடில் ஓவர்கள் மிகவும் முக்கியம். ஏனெனில் அங்குதான் ஆட்டத்தின் போக்கு மாறக்கூடிய சூழல் ஏற்படும். ரன்களும் குவிக்க வேண்டும் அதே சமயம் விக்கெட்டுகளையும் இழந்துவிட கூடாது என்பதால் அத்தகைய சூழலில் பேட்டிங் ஆடுவது எப்போதும் சவாலானது. சிறு தவறு செய்தால் கூட ஆட்டத்தின் போக்கு மாறலாம். மிடில் ஓவர்களை சரியாக கடந்துவிட்டால் கடைசி ஓவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை.

நாக்பூர் போட்டியில் கூட நாங்கள் இங்கிலாந்து அணியை மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்தி விக்கெட் பெற்றதால் தான் எங்களால் வெற்றி பெற முடிந்தது. மிடில் ஓவர்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தால் எதிரணியால் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. அதை நாங்கள் சிறப்பாக கையாண்டோம். நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடவே விரும்புகிறோம். நாங்கள் எதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வரையறை எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு வீரராகவும், அணியாகவும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடினமாக உழைக்கிறோம். அதுதான் நாங்கள் செய்ய விரும்புவது. வீரர்களை பொறுத்தவரை தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் வரை, அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

ரோகித் எங்களின் வெற்றியை பறித்துவிட்டார்;
தோல்வி குறித்து பட்லர் பேசுகையில், “இந்தப் போட்டியில் நாங்கள் நன்றாகவே விளையாடினோம். பென் டக்கட், லிவிங்ஸ்டன் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக சிறப்பாகவே செயல்பட்டோம். முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்தபோது, இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என்றே கணித்திருந்தோம். ஆனால் எங்கள் கணிப்பை ஒற்றை ஆளாக நின்று தவிடுபொடி ஆக்கிவிட்டார் ரோகித் சர்மா. ரோகித்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அவரது பேட்டிங் அற்புதமாக இருந்தது. நாங்கள் இன்னும் ஒரு 50 ரன்களை சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்ய தவறிவிட்டோம்.’’ என்று பட்லர் கூறினார்.

The post கில், ஸ்ரேயாஸ் ஆதரவால் சதம் சாத்தியமானது: ரோகித் உற்சாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : Shreyas ,Rokit ,Cuttack ,England ,Audi ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...