கலி: லத்தீன் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்தவர் விக்டர் எஸ்கோபர் (60). நீரிழிவு நோய் மற்றும் இதய கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நிலை மோசமடைந்து எப்போதும் வீல் சேரிலேயே நடமாடும் நிலை ஏற்பட்டது. மேலும், நுரையீரல் பாதிப்பால் அவருக்கு சுவாசிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு நோய்கள் இருந்ததால் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அரசிடம் பலமுறை இவர் மனு அளித்தார். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன. இதனால், அவர் கடும் மன வேதனை அடைந்தார்.‘குணப்படுத்த முடியாத நோய் உள்ளவர்களை கருணை கொலை செய்யலாம்,’ என கடந்த 1997ம் ஆண்டு கொலம்பியா அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், எஸ்கோபருக்கு அப்படிப்பட்ட நோய் இல்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். வேறு பல கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ‘கவுரவமான முறையில் சாவு உரிமை’ என்ற முடிவை எடுப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஜூலையில் அனுமதி அளித்தது. இதன்படி, எஸ்கோபர் உள்பட 3 பேரை கருணை கொலை செய்யலாம் என்று அரசு ஒப்புதல் அளித்தது. இதில் முதல் நபராக கடந்த 7ம் தேதி எஸ்கோபர் கருணை கொலை செய்யப்பட்டார். கருணை கொலைக்கு முன்பாக, தனது குடும்பத்துடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் விஷ ஊசியை செலுத்தும் முன்பாக வெளியிட்ட வீடியோவில், ‘நான் அனைவருக்கும் குட் பை என்று சொல்ல மாட்டேன். மீண்டும் பார்க்கிறேன் என்றே சொல்ல விரும்புகிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒவ்வொருவரும் படிப்படியாக கடவுளிடம்தான் சென்று சேர வேண்டும். மக்கள் அவதிப்படுவதை கடவுள் விரும்பமாட்டார்,’ என்று தெரிவித்தார். இதை பார்த்த மக்கள், அவருடைய மன திடத்தை கண்டு ஆச்சர்யப்பட்டனர். கண்ணீர் சிந்தினர். டாக்டர்கள் முதலில் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர், விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்தது. ரோமன் கத்தோலிக்க நாடாக இருந்த போதிலும் கருணை கொலைக்கு அனுமதி அளித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு கொலம்பியாதான் என்பது குறிப்பிடத்தக்கது….
The post கொலம்பியாவில் குடும்பம் சகிதமாக மகிழ்ச்சியுடன் சாவை தழுவிய முதியவர்: கண்ணீர் வரவழைத்த கடைசி நேர பேச்சு appeared first on Dinakaran.