புதுடெல்லி: கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி தமிழகம் உட்பட 8 மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இது தொடர்பாக, அரியானா, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சமீபத்தில் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில், இந்தியாவில் அதிகரித்து வரும் டெல்டா, ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநிலங்கள் கேட்டு கொள்ளப்பட்டன. குறிப்பாக, சர்வதேச பயணிகளை கண்காணித்தல், 14 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் வைத்தல் மற்றும் பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.சென்னையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனை உடனடியாக தடுக்கவில்லை என்றால் உயிரிழப்புகள் அதிகரிக்கும். சென்னையில் டிசம்பர் 8-14 வரை 987 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 15-21 வரை 1,039 பேர் பாதிக்கப்பட்டனர். இவை மேலும் உயர்ந்து டிசம்பர் 22-28 வரை 1,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தொற்று பரவலை தடுப்பதற்கு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும். திருமணங்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆகியவற்றை முறையாக கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….
The post தீவிரமாக பரவும் கொரோனா: 8 மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் appeared first on Dinakaran.