×

மும்பை போலீஸ் என்று கூறி பிரபல நடிகையிடம் பணம் பறிக்க முயற்சி

திருவனந்தபுரம்: மும்பை போலீஸ் என்று கூறி பிரபல மலையாள நடிகை மாலா பார்வதியிடமிருந்து பணம் பறிக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகையான மாலா பார்வதி. இவர் தற்போது விக்ரமின் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இவர் மதுரையில் இருந்தார். அப்போது காலை 11.50 மணியளவில் மாலா பார்வதிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு நபர், தாங்கள் ஒரு கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், தான் யாருக்கும் பார்சல் அனுப்பவில்லை என்று மாலா பார்வதி கூறினார்.

சிறிது நேரம் கழித்து மும்பை போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் மாலா பார்வதிக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுக்கொண்டார்.இதில் சந்தேகமடைந்த மாலா பார்வதி, உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து நடிகை மாலா பார்வதி கூறுகையில், மும்பை போலீஸ் என்று கூறி என்னை பல மணி நேரம் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தனர். போலீஸ் அதிகாரி என்று கூறிய நபர் அனுப்பி வைத்த அடையாள அட்டையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக அவரது போன் இணைப்பை துண்டித்து விட்டேன் என்றார். நடிகை மாலா பார்வதி தமிழில் இது என்ன மாயம், நிமிர், மாரா, எப்ஐஆர், அன்னபூரணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

The post மும்பை போலீஸ் என்று கூறி பிரபல நடிகையிடம் பணம் பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Mumbai Police ,Thiruvananthapuram ,Mala Parvathy ,Vikram ,
× RELATED நடிகை பலாத்கார புகார் நடிகர் சித்திக் மீண்டும் போலீசில் ஆஜர்