×
Saravana Stores

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் நிறைவு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் கடைசி வாகன சேவையான பாயும் குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி நேற்று முன்தினம் இரவு அருள் பாலித்தார். நிறைவு நாளான நேற்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர்.

வராக சுவாமி கோயில் எதிரே மண்டபத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து குளத்தை சுற்றி அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெற்றது. இதில் செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* 15 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 நாட்களாக நடந்த பிரமோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் உண்டியல் மூலம் ரூ.26 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது என்று தேவஸ்தான செயல்அதிகாரி ஷியாமளா ராவ் கூறினார். பிரமோற்சவத்தின் 8 நாட்களில் 26 லட்சம் பேருக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

* 30 லட்சம் லட்டுகள் விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஏழுமலையானின் பிரசாதமாக லட்டுகளை வாங்கி செல்வார்கள். கடந்த 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனையானது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் நிறைவு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் appeared first on Dinakaran.

Tags : Brahmotsavam ,Tirupati Eyumalayan Temple ,Chakrathalwar Theerthavari ,Tirumala ,Chakrathalwar Theerthawari ,Pramotsavam ,
× RELATED திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்