×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமானம் ஓடத் தொடங்கியதும் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி

சென்னை: சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, பயணி ஒருவர் திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், விமானம் அவசர அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. மும்பையை சேர்ந்த அந்த பயணியை, விமானத்திலிருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். இதனால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக மும்பை புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.

விமான பணிப்பெண்கள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றது யார் என பார்த்தபோது, அவசரகால கதவு அருகே இருக்கையில் அமர்ந்திருந்த, மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் (45) என்ற பயணிதான், விமானத்தின் கதவை திறக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளபட்டதில், தெரியாமல் கதவைத் திறக்கும் பட்டனை அழுத்தி விட்டேன் என்று அவர் கூறினார்.

இதனை விமானி ஏற்றுக் கொள்ளாததால் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வருண் பாரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மும்பை செல்ல வேண்டிய இந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 2 மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமானம் ஓடத் தொடங்கியதும் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,IndiGo Airlines ,Mumbai ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் சிங்கப்பூர்...