×

முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி ஏற்பு

சென்னை: முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன், தெலங்கானா மாநில மேலிட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக பதவி ஏற்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், கேரள மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளராக முன்னாள் எம்பி விஸ்வநாதனை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக தெலங்கானாவில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டும், 2024ம் ஆண்டு ஐதராபாத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கன்டோண்மென்ட் இடைத்தேர்தலில் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டும் வகையில் சிறப்பாகப் பணியாற்றினார்.

இவரது சிறப்பான செயல்பாடுகளை அடுத்து அவருக்கு தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளராக பெ.விஸ்வநாதன் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர் தீபாதாஸ் முன்ஷி, தெலங்கானா மாநில தலைவர் கணேஷ்குமார் கவுடு, அகில இந்திய செயலாளர் டி.சி.விஷ்ணுநாத் எம்எல்ஏ மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அம்மாநில காங்கிரசார் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post முன்னாள் காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தெலங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Former ,Kancheepuram ,Viswanathan ,Telangana ,Congress ,Chennai ,Telangana State Congress Party ,National Secretary ,All India Congress Party ,Tamil Nadu Congress Party ,Kanchipuram ,
× RELATED மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சுகள்...