×

விருதுநகர் ராணுவ வீரர் சிக்கிம் கார் விபத்தில் பலி


வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (41). சுபேதார். கடந்த 2004ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர், தற்போது அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் பின்னாகுரியில் இருந்து சிக்கிம் மாநிலத்தின் பாக்யோங் பகுதிக்கு நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் தங்கப்பாண்டியன் உள்பட 4 ராணுவ வீரர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது ரெனாக்-ரோங்லி நெடுஞ்சாலையில் வெர்டிக்கிள் பீர் என்ற இடத்தில் கார் சாலையை விட்டு விலகி, காட்டுப்பகுதியில் கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த தங்கப்பாண்டியன், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரதீப் படேல், இம்பாலை சேர்ந்த பீட்டர், அரியானாவை சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வந்த தங்கப்பாண்டியனுக்கு, வளர்மதி என்ற மனைவி, 8 மற்றும் 6 வயதில் 2 மகன்கள் உள்ளனர். அவருடன் பிறந்தவர்கள் 11 பேர். இதில், 7 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள். வாகன விபத்தில் தங்கப்பாண்டியன் உயிரிழந்ததை அறிந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

The post விருதுநகர் ராணுவ வீரர் சிக்கிம் கார் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sikkim ,Vathirairipu ,Thangapandian ,Kansapuram ,Virudhunagar district ,Subedar ,Assam ,Pinnaguri ,West Bengal ,Pakyong ,
× RELATED சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு