×

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து போதை காவலர் படுகாயம்: செல்போனை பறித்து தள்ளி விட்டதாக நாடகம்

விருதுநகர்: ஓடும் ரயிலில் இருந்து போதையில் ஆயுதப்படை காவலர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தென்காசி மாவட்டம், குலசேகரகோட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(28). மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர். இவர் நேற்று முன்தினம் இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டிக்கு புறப்பட்டார். முன்பதிவு இல்லாத பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். விருதுநகர் அருகே பட்டம்புதூர் பகுதியில் அதிகாலையில் ரயில் வந்தபோது ஜெயக்குமார் திடீரென கீழே விழுந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த ஜெயக்குமாரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், சிலர் தனது செல்போனை பறித்துக்கொண்டு கீழே தள்ளிவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், ரயிலில் ஜெயக்குமார் தவறவிட்ட கைப்பை பயணிகளால் மீட்கப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதும், அதில் அவரது செல்போன் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மீண்டும் விசாரித்தபோது, போதையில் இருந்ததை மறைக்க செல்போன் பறிபோனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post ஓடும் ரயிலில் இருந்து விழுந்து போதை காவலர் படுகாயம்: செல்போனை பறித்து தள்ளி விட்டதாக நாடகம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jayakumar ,Kulasekarakottai, Tenkasi district ,Mayiladuthurai District Armed Forces Constable ,Kovilpatti ,Senthur Express ,
× RELATED பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம்