×

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளிக்கும் பசுமை சின்னமனூரில் நெற்பயிர்கள் அமோக விளைச்சல்

* கருவிலிருக்கும் குழந்தையை போல் பாதுகாக்க வேண்டும்

*  நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் ஆலோசனை

சின்னமனூர் : சின்னமனூரில் பெரியாற்றின் பாசனத்தில் இரண்டு மாதமான 60 நாள், 50 நாள் 30 நாள் என நடவு முடிந்து தலை முதல் கடை கோடி வரையில் நெற்பயிர்கள் அமோகமாக தீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவு முல் லைப் பெரியாற்று பாசனத்தில் வருடத்தில் இருபோகம் நெல் சாகுபடி விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சின்னமனூர் பகுதியைச் சுற்றி அட்சய பாத்திரங்களாய் விளங்கும் கருங்காட்டாங்குளம், உடையகுளம், செங்குளம், சிறுகுளம் என கண்மாய், குளங்களில் நிரப்பப்பட்டு இரு போகங்களுக்கும் இடையே திடீரென ஏற்படும் பாசன பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இதில் நேரடியாக எடுத்து பயன்படுத்தி நெல் நாற்றுக்களையும் நெல் பயிர்களையும் 110 நாட்கள் வரை வளர்ச்சி அடையச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் இருக்கின்ற நான்காயிரம் ஏக்கர் அளவு 60 நாள், 40 நாள், 30 நாள் என கடைக்கோடி வயல் வரை தற்போது நெற்பயிர்கள் தீவிரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இருக்கும் பருவ கால சூழ்நிலையும் நெற்பயிர்களுக்கு சாதகமாக இருக்கிறது. நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியோடு இயற்கை கொண்ட பசுமையாக வளர்ந்திருக்கிறது.

சின்னமனூர் பகுதியில் மாநில தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடக்கும் போது எங்கு பார்த்தாலும் பசுமை போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. தற்போது திடீரென புகையான் நோய் தாக்குதல் தென்பட்டதால் மார்க்கையன் கோட்டை பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் அதிகம் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியது.

அதற்காக சின்னமனூர் வேளாண்மைதுறை அதிகாரிகள் சில ஆலோசனைகளை வழங்கி அதனை விரைவாக பயன்படுத்தி நெற் பயிர்களை காக்கும் வழி முறைகளை தெரிவித்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்பட்ட பெரியாற்று நீரின் வாயிலாக 25 நாட்களில் நெல் நாற்றுக்களை வளர்த்து எடுத்து நடவு துவங்கி சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதி முழுவதும் நடவுப் பணியினை நிறைவு செய்தனர். தற்போது இரண்டு மாத பயிர்களாக வளர்ந்து உயர்த்து பால் பிடிக்கும் பருவத்தை தொட்டுள்ளது. விரைவில் இவை அறுவடையை எட்டும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில் சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதியும் 37 வருட விவசாயியுமான தேவேந்திரன் புகையான் நோய் தாக்கினால் வராமல் தடுத்து நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியதாவது:நெற் பயிர்களை நடவு பணி துவங்கியவுடன் 110 நாட்கள் வரை வளர்க்கும் முறை ஒரு கர்ப்பிணி தன் வயிற்றில் வளர்க்கும் குழந்தை போல் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பில் 5 மாதம் வரையில் கருபிடித்து வளரும் போது உணவு அருந்த பிடிக்காது. ஆனால் வம்பாக திணித்து குழந்தை வளர்ச்சிக்காக திணித்து சாப்பிட வைக்கிறோம்.

சாப்பிடுவதற்கான சூழல் உருவாக்கி ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கருவை வளர்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிகம் சாப்பிடுவதற்கு ஆசை படுவார்கள் அதிக உணவை கொடுக்காமல் குறைக்கும் விதமாக பத்து மாதத்தில் சுகப்பிரசமாக பிறக்கும். அது போல் ஒரு நெற்பயிர்களை 110 நாட்களுக்குள் வளர்க்கும் நேரத்தில் பாதி நாட்களுக்கு யூரியா என்பதை முற்றிலும் அப்புறப்படுத்தி மணிச்சத்தை மட்டும் தொடர்ந்து வழங்கினால் புகையான் நோய் தடுக்கப்படலாம்.

இதில் முதல் 24 மணி நேரத்திற்கு தண்ணீரை வயலில் பாய்ச்சி தேங்க விட்டு, அடுத்த 24 நாட்களுக்கு தண்ணீரை வடித்து கட்டி காய விட்டு நெற்பயிரை வளர்க்கப்பட வேண்டும். மேலும் வயல்வெளி பகுதியில் பட்டினி போடும் மெழுகு பதம் போல் யூரியா முழுவதும் அறவே நிறுத்தி விட்டு மணிசத்தையும் சல்பேட்டையும் பயன்படுத்தினால் நோய் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இதில் ஏக்கருக்கு 5 கிலோ மணிச்சத்தும் 20 கிலோ சல்பேட் உரத்தையும் மட்டும் பயன்படுத்தினாலே கூடுதல் விளைச்சல் கிடைக்கும், அதே போல் உற்பத்தியும் மேலோங்கும் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் தரும் வகையில் கை கொடுக்கும் விவசாயிகள் வேளாண்மை துறை அறிவுறுத்தலை கேட்பதே இல்லை. அவர்களின் இஷ்டம் போல் பொது நடுதல் முதல் துவங்கி யூரியாவை அதிகளவில் பயன்படுத்துவதால் புகையான் நோயில் சிக்குகின்றனர்.

வயல்வெளிகளில் மண்ணை பண்படுத்தி சேற்றுழவு துவங்கி நடவு நெல் நாற்றுகள் தீவிர வளர்ச்சி வரை ஒரு ஏக்கரில் ரூ.30 ஆயிரம் செலவு செய்கின்றனர். சின்னமனூர் பகுதியில் தற்போது இரண்டு மாதத்தை நெருங்கியுள்ள மேற்பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் தீவிர வளர்ச்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார்.

இயற்கை வழி உரம் டிரை பண்ணுங்க…

இது வேளாண் அதிகாரிகள் கூறியதாவது‘‘மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள், காய்கறிகள், பழங்கள் பயிரிடப்படுகின்றன. இவைகளில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நன்றாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், மண்ணின் பௌதிக குணத்தை மேம்படுத்தி உற்பத்தி தன்மையை அதிகரித்து கொடுக்கும்.

அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையிலேயே அளிக்கும். மேலும் ஊட்டமேற்றிய தொழு உரம், குறைந்த அளவு ரசாயன உரம், இயற்கை உரம் கலந்த கலவையாக பயன்படுத்தலாம். காய்கறி விதைகள் விதைப்பதற்கு முன் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிர் பாதுகாப்பு மருந்துகளை கலந்து விதை நேர்த்தி செய்வதால் நாற்றங்கால் நிலையில் ஏற்படும் நோய் தாக்குதலை தடுக்கலாம்.

பஞ்சகாவ்யா போன்ற திரவநிலை உரங்களை தெளிப்பதால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் பூ பூக்கும் தன்மை அதிகரிக்கும். வேப்பம் புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணை, வேப்பங்கொட்டை சாறு போன்ற வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். எனவே விவசாயிகள் ரசாயன உரம், மருந்துகளை தவிர்த்து இயற்கை வழி உரம் மற்றும் பயிர்பாதுகாப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காட்சியளிக்கும் பசுமை சின்னமனூரில் நெற்பயிர்கள் அமோக விளைச்சல் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Nebayru ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்