×

நெல்லையில் போதை பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாக மிரட்டி மும்பை போலீசார் போன்று நாடகமாடி மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பண மோசடி: மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


நெல்லை: போதை பொருட்கள் பார்சல் கூரியர் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் மும்பை போலீசார் போன்று மர்ம நபர்கள் பொதுமக்களின் செல்போன்களில் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறித்து வருகின்றனர். இது போன்ற கால்கள் வந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ உடனே நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசாரை பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ள வேண்டும் என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார்மீனா உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் காவல் நிலையம் விடுத்துள்ள செய்திகுறிப்பு: சைபர் மோசடி நபர்கள் புதியதாக ஒரு மோசடியில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு போன் மூலம் தொடர்புகொண்டு தங்களின் ஆதார் கார்டு விபரங்களை பயன்படுத்தி கூரியர் மூலம் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக மர்ம நபர்கள் தெரிவிக்கின்றனர்.

அது சம்பந்தமாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து மும்பை போலீசார் பேசுவது போன்று ஸ்கை வீடியோ கால் தொடர்பு கொண்டு எப்.ஐஆர்.காப்பி அரெஸ்ட் வாரண்ட் போன்ற ஆவணங்களை போலியாக தயார் செய்து அவர்களை வீட்டு காவல் (ஹவுஸ் அரெஸ்ட்) செய்திருப்பதாகவும், இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் வங்கி விபரங்கள் மற்றும் அவர்களிடம் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லியும் வெரிப்பிகேஷன் முடிந்த பின்னர் தங்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாக நம்ப வைத்து ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி விவரங்களை பகிர்வோருக்கு பெரும் நிதி இழப்பும் ஏற்படுகிறது.

அரசு வங்கியை குறிப்பிட்டு மர்ம நபர்கள் மோசடி: போலியான வாட்ஸ் அப் கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் அரசு வங்கி பரிசு புள்ளிகள் பற்றிய பொய்யான (போலியான) செய்திகள் மர்ம நபர்கள் அனுப்பி வைக்கின்றனர். ஹேக்கர்கள் இந்த குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் ‘அரசு வங்கி பெயரை’ மாற்றுகிறார்கள். இந்த பொய்யான செய்திகள் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து தங்களது அரசு வங்கியின் பரிசு புள்ளிகளின் விவரங்களை கூறுமாறு இணைப்புகளை கொண்டிருக்கும் இதனை நம்பி விவரங்களைத்தருவோருக்கு நிதி இழப்பு (பண மோசடி) ஏற்படுவதோடு அவர்களின் நெட்வொர்க்குகளில் மொபைல் எண்ணுக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.

தமிழகத்தில் 73 சைபர் கிரைம் வழக்குகள்
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் இந்த மோசடி தொடர்பாக 73 சைபர் புகார்கள் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட் போர்ட்டலில் பெறப்பட்டு உள்ளன. மோசடிக்காரர்கள் முதலில் ஒரு பாதிக்கப்பட்டவரின் மொபைல் போனை ஹேக் செய்வதன் மூலம் அவர்களின் சமூக ஊடக கணக்குகளுக்கான விவரங்களை பெறுகிறார்கள். பொய்யான செய்திகளை பாதிக்கப்பட்டவரின் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட குழுக்களுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் குழுக்களின் ஐக்கான்கள் மற்றும் பெயர்களையும் அரசு வங்கி பெயர் போலியாக மாற்றுகிறார்கள். இதனால் செய்திகள் உண்மையானதாக தோன்றுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கி விவரங்களை புதுப்பித்து எஸ்.பி.ஐ. பரிசு புள்ளிகளை ரிடீம் செய்யுமாறு கூறுவார்கள். பரிசு புள்ளிகள் காலாவதியாக உள்ளதாக கூறி அவசரப்படுத்துவார்கள்.

தாங்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயரில் வரும் போலியான லிங்குகளை அனுப்பி ஏமாற்றுகிறார்கள். பலர் இந்த மோசடியில் சிக்கி விடுகிறார்கள். இத்தகைய போலியான நடவடிக்கையில் நெல்லை மாநகர மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது சந்தேகத்திற்குரிய நடவடிக்கையை கண்டறிந்தால் பயப்படவோ, பதற்றப்படவோ வேண்டாம். பாதிக்கப்பட்டவர் உடனே சைபர் குற்ற தொலைபேசி உதவி எண்.1930-ஐ உடனடியாக அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நெல்லையில் போதை பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளதாக மிரட்டி மும்பை போலீசார் போன்று நாடகமாடி மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பண மோசடி: மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mumbai Police ,Nellai ,Nellie ,
× RELATED நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான்...