×

மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம்

நிலக்கோட்டை: மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணமடைந்தார். இதனால் கர்ப்பிணி மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(24). பாஸ்ட் புட் மாஸ்டர். இவர், 10 மாதங்களுக்கு முன் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த நாகம்மாளை(21) காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்னர் நாகம்மாளை, பெற்றோர் அவர்களது ஊருக்கு அழைத்து சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில் மனைவியை பார்க்க அருண்குமார் தினமும் இரவு மாமனார் வீட்டிற்கு சென்று வந்தார்.

கடந்த 25ம் தேதி இரவு வேலை முடிந்து சிலுக்குவார்பட்டிக்கு டூவீலரில் சென்றவர், அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் எதிரே சாலையோரம் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரித்து வந்தனர்.

இதனிடையே மகள் கர்ப்பிணியாக உள்ளநிலையில் மருமகன் இறந்துவிட்டாரே என்ற வேதனையில் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சின்னப்பொண்ணுவும் உயிரிழந்தார். கணவரை தொடர்ந்து தாயும் உயிரிழந்ததால் மன உளைச்சலில் நாகம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மருமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் மாமியார் மாரடைப்பில் மரணம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Arun Kumar ,Jaganathapuram ,Kodairod ,Dindigul district ,
× RELATED நிலக்கோட்டை அருகே மருமகன் உயிரிழந்த...