×

எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணியால், உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருவதால், ஆங்காங்கே பாலம் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

இச்சாலை விரிவாக்க பணியின் காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் அருகே மாம்பாக்கம் பகுதியில் தனியார் கண்ணாடி தொழிற்சாலை எதிரே பாலம் கட்டும் பணிக்காக 5 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, அங்கு ராட்சத அளவில் சிமென்ட் பைப் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக அருகிலேயே வாகனங்கள் செல்ல ஏதுவாக சேவை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில், பணிகள் நடைபெறும் இடத்தில் வாகன ஓட்டிகளுக்கு, போதுமான பாதுகாப்பு தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகளும் எதுவும் வைக்கபடவில்லை. மேலும், பணிகள் நடக்கும் இடத்தில் கம்பிகள் நீட்டியபடி உள்ளன. இதனால், வாகனங்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தால் உயிர் பலி ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணிகள் நடைபெறும் இடங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : National Highway ,Sriperumbudur ,Chennai-Bengaluru National Highway ,Dinakaran ,
× RELATED எச்சரிக்கை பலகை, தடுப்புகள் இல்லாமல்...