×

அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரு.வி.க.வுக்கு மணிமண்டபம்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு

பூந்தமல்லி: அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரு.வி.க வுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என டி.ஆர் பாலு எம்பி தெரிவித்துள்ளார். தமிழ் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 141வது பிறந்தநாள் விழாவையொட்டி போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக பொருளாளர் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, உள்ளிட்டோர் நேற்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், திரு.வி.க. வாழ்ந்த இல்லம் தற்போது நூலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திரு.வி‌.க. சிலை மற்றும் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான அரசியல் கட்சியினர், திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், டி.ஆர்.பாலு எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: திரு.வி.க.விற்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அந்த திட்டம் தற்போது நிறைவேறி இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம். நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சரி செய்ய சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் ஆர்வலர்கள் அதற்கு நிதி உதவி செய்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் மிகப் பெரிய மணிமண்டபம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு தமிழக அரசும், துறை சார்ந்த அதிகாரிகளும் உறுதுணையாக இருப்பார்கள்.

எந்தப் பிரச்னை என்றாலும் அதில் ஒற்றுமையாக இருந்து போராடுவது வழக்கம். தொழிற்சங்க தலைவராக திரு.வி.க. இருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மிகப்பெரிய போராட்டக்காரராக இருந்த திரு.வி.க. தமிழ்த் தென்றலாகவும் விளங்கினார். அடுத்த விழா நடக்கும்போது இங்கு மணிமண்டபம் அமைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. தமிழ் அறிஞர்களும் அதனை விரும்புகிறார்கள். முருகர் தமிழ் கடவுள் என்பது தெரியும். முருகனுக்காக எடுக்கப்பட்ட மாநாடு, தமிழ் மாநாடாகத்தான் எடுக்கப்பட்டது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் கேட்பதற்கு பதில் சொல்ல திமுக தயார். அது இந்த நிகழ்ச்சி அல்ல என தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் நொளம்பூர் ராஜன், வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் துரை வீரமணி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரு.வி.க.வுக்கு மணிமண்டபம்: டி.ஆர்.பாலு எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Mani ,VK ,DR ,Balu MP ,Poontamalli ,V.K. ,Tamil ,Thandalam ,Borur ,Mr.V.Kalyana Sundaranar ,Mani Mandapam ,Mr.VK ,Balu ,Dinakaran ,
× RELATED கொடியில் காயப்போட்டிருந்த துணிகளை...