×

விக்கிரவாண்டி டோல்கேட்டில் லாரி மோதி ஊழியர் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல்கேட்டில் லாரி மோதி ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் நான்காவது வழித்தட கட்டண வசூல் மையத்தில் ராசாபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன்(31) மற்றும் விழுப்புரம் சிந்தாமணியை சேர்ந்த மணிகண்டன் மகன் கருணாநிதி(40) ஆகியோர் பணியில் இருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து மூட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து டோல்கேட் நான்காவது வழித்தடத்தில் நின்று கொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் மீது மோதி கட்டண மையத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கருணாநிதிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்த ஊழியர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விக்கிரவாண்டி டோல்கேட்டில் லாரி மோதி ஊழியர் பலி appeared first on Dinakaran.

Tags : Vikrawandi tollgate ,Vikravandi ,Vikravandi tollgate ,Villupuram District ,Rasapalayam toll ,Chennai ,Trichy ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி டோல்கேட்டில் லாரி மோதி ஊழியர் பலி