×

ராஜிவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வீதிதோறும் ஊர்வலமாக சென்று சாதனைகளை விளக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவை 21ம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று உறுதிபூண்ட ராஜிவ்காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். தமது 40வது வயதில் இந்திய நாட்டின் இளைய பிரதமராக பொறுப்பேற்று அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும்தான் இந்த நாட்டின் வறுமையை விரட்ட உதவும் என்று நம்பியவர்.

இன்று அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர். நாட்டை எதிர்நோக்கியிருந்த பல பிரச்னைகளை தீர்ப்பதற்கு திறந்த மனதுடன் பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். தமிழ்நாட்டு மக்களோடு ராஜிவ்காந்தி கொண்டிருந்த நெருக்கமும், அன்பும் அளவற்றவை. 1988ம் ஆண்டில் 13 முறை தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக அவரே வாகனத்தை ஓட்டிச் சென்று வழிநெடுக மக்களை சந்தித்து அவர்களோடு உரையாடி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து ஏழை, எளிய மக்கள் மீது அன்பை பொழிந்தவர். தமிழ் மக்களின் பாச வெள்ளத்தில் திளைத்தவர்.

எதிர்கால இந்தியாவுக்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கு மக்களின் ஆதரவோடு வழிநடத்தக் கூடிய ஆற்றல்படைத்த தலைவராக திகழ்ந்த ராஜிவ்காந்தி, 1991 தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது, தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளின் சதித் திட்டத்தினால் நயவஞ்சகமாக நம்மிடமிருந்து பறிக்கப்பட்டார். அவரது நினைவை தமிழக மக்களிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ராஜிவ்காந்தி 80வது பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அவரது திருவுருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிநெடுக அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டு பிரசுரத்தை மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ராஜிவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வீதிதோறும் ஊர்வலமாக சென்று சாதனைகளை விளக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Rajivkanti ,CHENNAI ,PRESIDENT ,ELVAPERUNTAKAI ,INDIA ,
× RELATED சென்னை ராஜீவ்காந்தி அரசு...