×

மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சேலம்: நடப்பாண்டில் 2ஆவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் நேற்று காலை 20,505 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகாலை வினாடிக்கு 26,000 கன அடியாக உயர்ந்துள்ளது. அணை நிரம்பியதால் கடந்த 7ஆம் தேதி மூடப்பட்ட மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகுகள் மீண்டும் திறக்கப்பட்டன. உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடது கரை வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Kaviri ,Salem ,Matur Dam ,Karnataka ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு