×

தேசிய சித்த மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி: 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கேற்பு

தாம்பரம்: தாம்பரம் பகுதிகளில் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கேற்று பயன்பெற்றனர். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தாய்ப்பால் கொடுப்பதினால் பிறந்த குழந்தையின் ஆரோக்கியம் ஆயுள் வரை நீடிக்கும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், குழந்தைக்கும் அற்புதமான பல நன்மைகள் ஏற்படுகிறது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி, அதிகரிப்பதோடு ஊட்டச்சத்து நிறைவாக அளிக்க தாய்ப்பாலால் மட்டுமே முடிகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயம் குறைகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பால் அளிப்பதை போற்றி தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் 7ம்தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை சார்பில் மருத்துவமனையின் இயக்குநர் மீனாகுமாரி வழிகாட்டுதலின்பேரில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பூந்தமல்லி வட்டம், முல்லாதோட்டம், காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, அகரமேல், செல்வகணபதி நகர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையத்தில் குழந்தை மருத்துவத்துறையின் சார்பில் பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் தலைமையில், தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குழந்தை மருத்துவத்துறை ஆசிரியர்களால் மூன்று நாட்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 350க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு, சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், தாய்ப்பாலூட்டும் முறைகள், தாய்ப்பாலினை சேகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் முறைகள், தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் ஆகியவற்றை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த தகவல் சீட்டு மற்றும் தாய்ப்பாலை அதிகரிக்கும் மருந்துகளாகிய மாதுளை மணப்பாகு, சதாவேரி லாக்டோ பூஸ்ட் பொடி அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது. அப்போது தாய்மார்களின் ஏராளமான சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர்.

The post தேசிய சித்த மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி: 350க்கும் மேற்பட்ட தாய்மார்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : World Breastfeeding Week ,National Siddha Hospital ,Tambaram ,
× RELATED தாய் சேய் நலம் காக்கும் தாய்ப்பால்!