×

முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு, ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக தேர்வர்களுக்கு, குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களை தேர்வு செய்தவர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த 4 விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல் 750 கி.மீ., – 1000 கி.மீ., தொலைவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எம்.பிக்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கே மாற்ற வேண்டும் என மனு அளித்தனர். இந்நிலையில்தான் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு மையங்களை மாற்றி தேசிய தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

The post முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Examination Board ,Chennai ,National Examinations Board ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...