×

டோல்கேட்டில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் சஸ்பெண்ட்

*வேலூர் எஸ்பி அதிரடி

வேலூர் : பள்ளிகொண்டா டோல்கேட்டில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதால் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் ஆகிய இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக ரேஷன் அரிசி, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்திச்செல்லப்படுகிறதா என போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவார்கள். மேலும் விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் செல்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா காவல் நிலைய 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இருவரும் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த எஸ்பி மணிவண்ணன், விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நடந்த விசாரணையில், போலீஸ்காரர் சங்கரும், ஊர்க்காவல் படை வீரர் நவீனும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post டோல்கேட்டில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் போலீஸ்காரர், ஊர்க்காவல் படை வீரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : TOLGATE ,URKAWAL ,Vellore SP ,Vellore ,SP Manivanan ,Urkaval ,Skoligonda ,Vellore district ,Skoligonda National Highway ,
× RELATED தண்ணீர், ரேஷன் பொருட்கள் வாங்க தடை...