×

வாலிபரின் காருடன் தலைமறைவான 2 பேர் கைது மதுரையில் கார் பறிமுதல் வேலூரில் டிராவல்ஸ் நடத்துவதாக கூறி

செங்கம், ஜூலை 26: வேலூரில் டிராவல்ஸ் நடத்துவதாக கூறி, செங்கத்தை சேர்ந்த வாலிபரின் காருடன் தலைமறைவான 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் திருமூர்த்தி(28). இவர் வங்கியில் கடன் பெற்று கார் ஒன்றை வாங்கி வாடகைக்கு விட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது. அதில், வேலூரில் சுரேஷ் என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் ஒப்பந்த அடிப்படையில் காரை கொடுத்தால், உங்களுக்கு அதிகளவில் பணம் தருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, திருமூர்த்தி தனது காரை சுரேஷிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன்பிறகு ஒரு மாதமாகியும் திருமூர்த்திக்கு பணம் தரவில்லையாம். இதனால் சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ என வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த திருமூர்த்தி, வேலூரில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தார். அப்போது, தன்னிடம் காரை வாங்கிய சுரேஷ் என்பவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமூர்த்தி செங்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் நஸ்ருதீன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவரது கார் மதுரையில் இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும், டிராவல்ஸ் நடத்துவதாக கூறி திருமூர்த்தியின் காருடன் தலைமறைவான வேலூரை சேர்ந்த சுரேஷ்(28), காஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வாலிபரின் காருடன் தலைமறைவான 2 பேர் கைது மதுரையில் கார் பறிமுதல் வேலூரில் டிராவல்ஸ் நடத்துவதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vellore ,Sengam ,Lakshmanan ,Thirumurthy ,Kuppanantham village ,Thiruvannamalai district ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...