×

மரக்காணம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

விழுப்புரம், ஜூலை 26: மரக்காணம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே டீ.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன்(47). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆகஸ்ட் 3ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10வயது சிறுமியை அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மீன் பிடிக்கலாம் என்றுகூறி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து அங்குள்ள கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு தப்பித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் போக்சோ, கொலை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி வினோதா தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.8000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மகேந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post மரக்காணம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற தொழிலாளிக்கு சாகும் வரை சிறை appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Villupuram ,POCSO ,Villupuram district ,T. Nallalam ,Marakkanam ,
× RELATED மாமல்லபுரம் அருகே உற்பத்தியான உப்பை லாரியில் அனுப்பும் பணி தீவிரம்