×

வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி: கேரள அமைச்சர் பேட்டி

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறியது: வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

வருடம்தோறும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வருட மண்டல, மகரவிளக்கு சீசனில் மட்டும் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். எனவே இந்த வருடம் அதைவிட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்று கருதுகிறோம். ஆடி மாதத்தில் நடை திறந்தபோது கூட எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைந்து செய்யப்படும். வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஆன்லைன் மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். தற்போது நிலக்கல்லில் 8 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எருமேலியில் தற்போது 1100 வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது. இது 2000 ஆக உயர்த்தப்படும்.

சாலை விபத்துக்கள் மூலம் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் நவீன வசதிகள் அமைக்கப்படும். சன்னிதானத்திலுள்ள அரசு மருத்துவமனையில் இசிஜி, எக்கோ, டிஎம்டி ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். வனவிலங்குகள் மூலம் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். பம்பையிலும், சன்னிதானத்திலும் பக்தர்கள் மழை, வெயிலால் அவதிப்படாமல் இருக்க மேற்கூரைகள் அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். பம்பையில் இருந்து சன்னிதானம் வரை கேபிள் கார் அமைக்கும் பணிகளுக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் சபரிமலையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி: கேரள அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Mandal ,Makaravilakku ,Kerala ,Thiruvananthapuram ,Kerala Devasam Board ,Minister ,Vasavan ,Ayyappan Temple ,Ama Mandal ,
× RELATED சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கட்ட இடைக்காலத் தடை