×

பிறந்தநாள் பார்ட்டியில் விபரீதம் ஆண் நண்பர்களுடன் காதலி ஓட்டல் சென்றதால் வாலிபர்களுக்குள் மோதல்

* ஒருவர் குத்திக்கொலை * காதலன் உயிர் ஊசல்
* 3 பேர் கைது * 3 இளம்பெண்களிடம் விசாரணை.

மதுரை: ஆண் நண்பர்களுடன் ஓட்டலுக்கு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற காதலியை சந்தித்த ஆத்திரத்தில் நடந்த மோதலில், காதலனின் நண்பர் படுகொலை செய்யப்பட்டார். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மதுரை அருகே பரவையை சேர்ந்தவர் ரஞ்சித் (32). மதுரை புதூர் அல்அமீன் நகரைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் ராஜா உசேன் (43). இவர்களுக்கு ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 30 வயது பெண், அண்ணா நகரை சேர்ந்த 29 வயது பெண், சிக்கந்தர் சாவடியை சேர்ந்த 31 வயது பெண் ஆகியோருடன் நட்பு இருந்துள்ளது.

இதில் ஒரு பெண்ணின் பிறந்தநாளை நேற்று முன்தினம் மதுரை கேகே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கொண்டாடினர். பின்னர், நத்தம் ரோட்டில் காஞ்சரம்பேட்டை அருகே மற்றொரு ஓட்டலுக்கு காரில் சென்றனர். இதில் 30 வயது பெண்ணிற்கு போன் செய்த அவரது காதலர் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த சரவணக்குமார் (25), ‘‘எங்கு இருக்கிறாய்’’ என்று கேட்டுள்ளார். அவர் ஓட்டலில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சரவணகுமார், தனது நண்பரான தல்லாகுளத்தை சேர்ந்த இஷாக் (எ) காதர் இஸ்மாயிலுடன் (29) டூவீலரில் அங்கு சென்றார். அங்கு தனது காதலி, ஆண் நண்பர்களுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ‘‘என் காதலியை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்’’ எனக்கூறி, ரஞ்சித், ராஜா உசேனிடம் தகராறு செய்துள்ளார்.அப்போது ஏற்பட்ட மோதலில் ரஞ்சித், ராஜா உசேன் சேர்ந்து சரவணக்குமார், இஷாக் ஆகியோரை தொடை மற்றும் இடுப்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இஷாக் பரிதாபமாக இறந்தார்.
சரவணக்குமார் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, ரஞ்சித், ராஜா உசேன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து 3 இளம்பெண்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

The post பிறந்தநாள் பார்ட்டியில் விபரீதம் ஆண் நண்பர்களுடன் காதலி ஓட்டல் சென்றதால் வாலிபர்களுக்குள் மோதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...