×

கேரளாவில் தோட்ட வேலையில்லாததால் தமிழக தொழிலாளர்கள் அவதி

 

கம்பம், ஜூலை 22:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆமையார்,நெடுங்கண்டம்,கட்டப்பனை மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள ஏல செடிக்களுக்கு தோட்ட வேலைக்கு தமிழகத்தின் எல்லை பகுதியான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் போடி ஆகிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஏலச்செடிகளுக்கு கவாத்து வெட்டுதல், பராமரித்தல், களை எடுத்தல் போன்ற வேலைகளுக்கு தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பெண் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். காலை 5 மணிக்கு ஜீப் மூலம் கேரளா செல்லும் பெண்கள் மதியம் 1 மணி வரை அப்பகுதி தோட்டங்களில் வேலை செய்து திரும்புகின்றனர்.

இதற்காக இவர்களுக்கு தினசரி சம்பளமாக போக்குவரத்து செலவு போக ரூபாய் 350 வரை வழங்கப்படுகிறது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதிக மழை காரணமாக ஏலச்செடிகள் அழுகத் துவங்கியுள்ளன. இதனால் ஏலக்காய்கள் விளைச்சலின்றி காணப்படுகின்றது.

ஏற்கனவே கடந்த மார்ச், ஏப்ரல் மே ஆகிய மூன்று மாதங்களில் வெயிலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் ஏலக்காய் ஏலச்செடியில் கருகி பல கோடி நஷ்டமானது. தற்போது அதிக மழையின் காரணமாக ஏலச்செடிகள் அழுகி விடுகின்றன. இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு தோட்டத் தொழிலாளிகள் செல்வது முடங்கியுள்ளது. இதனால் தமிழக தொழிலாளர்கள் போதிய வேலை இன்றி தவித்து வருகின்றனர்.பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

The post கேரளாவில் தோட்ட வேலையில்லாததால் தமிழக தொழிலாளர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala ,Kampam ,Aamaiyar ,Nedungandam ,Kattappanai ,Idukki district ,Kampam valley ,Kudalur ,Lower Camp ,Uttampalayam ,Chinnamanur ,Dinakaran ,
× RELATED தமிழ் சினிமாவில் இதுவரை ஏதும்...