×

குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு நள்ளிரவில் திடீர் திடீரென தீ பிடித்து எரியும் வீடுகள்

 

வடலூர், ஜூலை 22: குறிஞ்சிப்பாடி அருகே நள்ளிரவில் மர்மமான முறையில் திடீர் திடீரென எரியும் வீடுகளால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட கல்குணம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமத்தில் கல்குணம் கிராமமும் ஒன்று.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக இப்பகுதியில் உள்ள வீடுகள் இரவு நேரங்களில் திடீர் திடீரென தீப்பற்றி எரிகிறது. மர்ம நபர்கள் யாரோ வீடுகளில் தீ வைத்துவிட்டு செல்வதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனாலும் தீ வைத்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க முடியவில்லை. கடந்த மே 24ம் தேதி சிவக்குமார் என்பவரது வீடு முதலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 2 நாள் கழித்து சக்திவேல் என்பவரது வீடும், ஜூன் 24ம் தேதி புகழ் உத்திராபதி, ஜூலை 12ம் தேதி தேவநாயகி, 19ம் தேதி வைரக்கண்ணு ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்து உள்ளது.

மேலும் வீடுகள் மட்டுமல்லாமல் மாடுகளுக்கு தீவனத்துக்காக வைத்திருந்த ரமேஷ், வைத்தி, சரவணகுமார் ஆகியோரின் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. கடந்த 2 மாதமாக மர்மமான முறையில் வீடுகள் தீப்பற்றி எரிந்து வரும் சம்பவம் கிராம மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கம் இழந்து அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு, வீடுகளுக்கு தீ வைப்பதாக கூறப்படும் மர்ம நபர்களை மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் இதுவரை 5 வீடுகளும், 3 வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிந்திருப்பதால் அடுத்து யார் வீடு எரிய போகிறதோ என்ற பதற்றத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ஏற்கனவே கல்குணம் கிராமத்தில் இயற்கை சீற்றத்தின் அழிவுகள் எங்களை விட்டு வைக்கவில்லை. தற்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் குழந்தைகளுடன் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இன்னும் எத்தனை வீடுகள் எரிய போகிறது என்று தெரியவில்லை. மேலும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் உடனடியாக வீட்டை கொளுத்தி விட்டு செல்லும் மர்ம நபர்களை பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீசார் கண்காணிப்பதோடு, இரவு நேரங்களில் ரோந்தும் செல்ல வேண்டும், என்றனர்.

The post குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு நள்ளிரவில் திடீர் திடீரென தீ பிடித்து எரியும் வீடுகள் appeared first on Dinakaran.

Tags : Kurinchipadi ,Vadalur ,Kalgunam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சிறப்பு குழு ஆய்வு