×

ஆடி மாத காற்றுக்கு கடல் அலையின் வேகம் அதிகரிப்பு: புனித நீராடும் மக்கள் கவனமுடன் இருக்க வலியுறுத்தல்

 

ராமநாதபுரம், ஜூலை 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்வளைகுடா பகுதியான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், தேவிப்பட்டிணம் நவபாஷன கடல், திருப்புல்லாணி சேதுக்கரை கடல், மாரியூர் கடல் ஆகியவை புண்ணிய கடற்கரை தலங்களாக விளங்குகிறது. இங்கு புனித நீராடும் மக்கள் மாலை அணிதல், விரதங்கள் தொடங்குதல், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கும், குறிப்பாக முன்னோர்களுக்கு சடங்குகள் செய்து திதி, தர்ப்பணம் கொடுத்தல் போன்றவற்றிற்காக வந்து செல்கின்றனர்.

நீராடி விட்டு இங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், சேதுக்கரை ஆகிய தீர்த்தக்கடல்கள் அலைகளின்றி அமைதியாக காணப்படும். ஆனால் மாரியூர் கடல் பேரலையுடன் காணப்படுவது வழக்கம். தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் ஓரத்தில் அலையின் தாக்கத்தால் சுமார் 5 அடிக்கு மேல் பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது.

புனித நீராட வரும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியோர் மிக கவனமாக நீராட வேண்டும். குடும்பத்தினர், குழுக்களாக சென்று பாதுகாப்பாக நீராடி வர வேண்டும். இதனை போன்று தனுஷ்கோடி அரிச்சல்முனை, வாலிநோக்கம், மூக்கையூர், நரிப்பையூர், ஐந்து ஏக்கர், ஏர்வாடி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்கரைகளுக்கு பொழுது போக்கிற்காக வரும் உள்ளூர் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் கடலில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இதனை போன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கவனமாக சென்று வரவேண்டும், வானிலை எச்சரிக்கையை பின்பற்ற வேண்டும், கடற்கரைகளில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆடி மாத காற்றுக்கு கடல் அலையின் வேகம் அதிகரிப்பு: புனித நீராடும் மக்கள் கவனமுடன் இருக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Rameswaram Agni Theertha Sea ,Devipattinam ,Navabhashana Sea ,Thirupullani Sethukarai Sea ,Mariyur Sea ,Gulf of Mannar ,Adi ,
× RELATED ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்