×

நாட்டில் 50% மக்களுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைக்கிறது: 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: இந்தியாவில் 50% மக்களுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநில அளவில் தமிழ்நாடு, கேரளாவில் 98 விழுக்காட்டினருக்கு 3 வேளையும் உணவு கிடைக்கும் நிலையில், குஜராத், ராஜஸ்தானில் வெறும் 31 விழுக்காட்டினருக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைப்பது அம்பலமாகியுள்ளது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டு விட்டதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட சரிபாதி மக்களுக்கு 3 வேளையும் உணவு கூட கிடைக்காத நிலை நீடிக்கவே செய்கிறது.

இந்த நிலையில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பெரும் பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் நடத்தப்பட்ட ஆய்வில் நாட்டில் 44% மக்களுக்கு 3 வேளையும் உணவு கிடைக்காத அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதே வேளையில் மாநில அளவில் கணக்கிடும் பொழுது இந்த எண்ணிக்கை வேறுமாதிரியாக உள்ளது. நாடு முழுவதும் 21 மிக முக்கியமான மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் நாட்டிலேயே தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஏழைகள், நடுத்தர குடும்பம், பணக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் 98 விழுக்காட்டினருக்கு 3 வேளையும் உணவு கிடைக்கிறது.

இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. இதேபோல் பாஜக ஆட்சி நடைபெறும் உத்திரப்பிரேதேசம், மத்தியப் பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடைசி 5 இடத்தில் உள்ளன. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 97%, கேரளாவில் 98% பேருக்கு 3 வேளையும் உணவு கிடக்கிறது. ஆனால் உத்திரப் பிரதேசத்தில் 41%, மத்தியப் பிரதேசத்தில் 39%, மராட்டியம் 34%, ராஜஸ்தானில் 34%, குஜராத்தில் 33% ஏழைகளுக்கு மட்டுமே 3 வேளை உணவு கிடைக்கிறது. பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையிலும் முன்னணியில் இருப்பது ஆய்வு முடிவில் உறுதியாகி இருக்கிறது.

The post நாட்டில் 50% மக்களுக்கு மட்டுமே 3 வேளையும் உணவு கிடைக்கிறது: 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Delhi ,India ,Tamil Nadu ,Kerala ,Gujarat ,Rajasthan ,
× RELATED பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு