×

கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற நபருக்கு தர்ம அடி

 

ஈரோடு, ஜூலை 18: ஈரோட்டில் கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ஈரோடு பெரியசேமூர் ஈபிபி நகர் பிபி கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). ஈரோடு மாநகராட்சி 12வது வார்டு திமுக கவுன்சிலர். இவர், நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாணிக்கம்பாளையம் சாலையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டு, நள்ளிரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முதல் மாடியில் ஏதோ மர்மநபர் நடமாட்டம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் ஜெகதீசன் வீட்டிற்குள் புகுந்த திருட முயன்ற மர்மநபரை சுற்றிவளைத்து பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஈரோடு வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், பிடிபட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம் அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த வள்ளிக்கண்ணன் மகன் மோகன்குமார் (33), என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மோகன்குமாரை ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கவுன்சிலர் வீட்டில் திருட முயன்ற நபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Erode ,Jagatheesan ,Erode Periasemur ,EPP ,Nagar ,PP Garden ,Erode Municipal Corporation ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...