×

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா படுதோல்வி

காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா படுதோல்வி அடைந்தார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த 2022 நவம்பரில் நடந்த தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெறவில்லை. இதையடுத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) தலைவர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, சிபிஎல்-யுஎம்என் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி வைத்து 3ம் முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

திடீரென்று கூட்டணிக்கான ஆதரவை சர்மா ஒலி திரும்ப பெற்றார். இயைடுத்து ஷேர் பகதூர் ஷா தலைமையிலான நேபாள காங்கிரசுடன் கைக்கோர்த்த பிரசந்தா பிரதமர் பதவியில் நீடித்தார். பின்னர் மீண்டும் கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டது. இந்த கூட்டணி அரசு மீது கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியில் நீடித்து வந்தது. தொடர்ந்து பிரசந்தா தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வந்த ஜனதா சமாஜ்வாடி கட்சி கடந்த மே மாதம் தன் ஆதரவை திரும்ப பெற்றது.

நேபாளத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஒரு கட்சி திரும்ப பெற்றால் 30 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி 138 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும். அதன்படி கடந்த மே 2ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசந்தா அரசு 157 வாக்குகள் வென்று பிரதமராக நீடித்து வந்தார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நடாளுமன்றத்தில் நேபாளி காங்கிரஸ் கட்சி 89 எம்பிக்களையும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – யுஎம்எல் கட்சி 78 எம்பிக்களையும் கொண்டுள்ளன.

இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைக்க கடந்த வாரம் முடிவெடுத்து, அதற்கான உடன்பாடு எட்டப்பட்டதால், பிரசந்தா அரசுக்கான ஆதரவை சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் திரும்ப பெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த பிரசந்தா முடிவு செய்தார். அதன்படி நேபாள நாடாளுமன்றத்தில் பிரசண்டா அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 258 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 63 வாக்குகள் மட்டுமே பதிவானது. அவருக்கு எதிராக 194 வாக்குகள் பதிவாகின. நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வியடைந்த பிரசந்தா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைதொடர்ந்து நேபாள காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன.

The post நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் பிரசந்தா படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Nepal ,Prashant Badu ,Kathmandu ,Prasanda ,Nepalese Parliament ,Nepali Parliament ,
× RELATED நேபாள பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானம் மூலம் வந்தது