×

புதுச்சேரியில் மனைவி விபசார வழக்கில் கைதானதால் 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை: மரக்காணம் அருகே பரபரப்பு

மரக்காணம்: புதுச்சேரியில் மனைவி விபசார வழக்கில் கைதானதால் 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33). இவர் தற்போது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்தவேலின் மனைவி கவுசல்யாவை புதுவை மாநில போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர்.

இதனால் மனஉளைச்சலில் இருந்த ஆனந்தவேலு, ஜோவிதா (4), 18 மாத குழந்தையான சஸ்மிதா ஆகிய 2 பெண் குழந்தைகளையும் கடந்த 10ம் தேதி கூனிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்ற ஆனந்தவேலு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை கூனிமேடு கடற்கரை பகுதி மற்றும் அனுமந்தை குப்பம் கடற்கரை பகுதியில் 2 பெண் குழந்தைகளின் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்து மரக்காணம் போலீசார் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதில் சடலமாக மீட்கப்பட்டது ஆனந்தவேலுவின் குழந்தைகளான ஜோவிதா மற்றும் சஸ்மிதா என்பது தெரியவந்தது. இதனால் இரண்டு குழந்தைகளையும் கடலில் வீசிவிட்டு தானும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குழந்தைகளை மட்டும் கடலில் வீசி கொலை செய்துவிட்டு அவர் தலைமறைவாகிவிட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதே நேரத்தில் மாயமான ஆனந்தவேலுவை கண்டுபிடிக்க அவரது செல்போன் டவர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது அவரது செல்போன் டவர் தொடர்ந்து புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை காட்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மரக்காணம் போலீசார் மற்றும் புதுவை போலீசாரும் சேர்ந்து ஆனந்தவேலுவை தேடினர். இந்நிலையில், தன்னை போலீசார் தேடுவதை அறிந்து கொண்ட ஆனந்தவேலு நேற்று மதியம் மரக்காணம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், மனைவி விபசார வழக்கில் கைதானதால் ஏற்பட்ட அவமானம், மனஉளைச்சல் மற்றும் குடும்ப தகராறால் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்தேன் என்று ஆனந்தவேலு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

* இரு மாநில போலீசார் குழப்பம்
ஆனந்தவேலு குடும்பத்துடன் இருந்த காலாப்பட்டு பகுதி புதுவை மாநில எல்லைக்குட்பட்டது. இரண்டு குழந்தைகள் உடல் கரை ஒதுங்கிய இடங்கள் தமிழக பகுதியான மரக்காணம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது. இதனால் ஆனந்தவேலுவின் மீது எந்த மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்துவது என எல்லை பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் மரக்காணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post புதுச்சேரியில் மனைவி விபசார வழக்கில் கைதானதால் 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை: மரக்காணம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Marakkanam ,Marakanam ,Anandavelu ,Koonimedu ,Villupuram district ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர்..!!