×

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

சேலம்: மதுரையை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது மகன் பரணிகுமார்(38), சேலத்தில் பிரபல ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது காதல் மனைவி விஜயலாவண்யா(35) அதே ஓட்டல் சூப்பவர்வைசராக இருந்தார். இவர்கள் ஓட்டலுக்கு உரிமையாளர்கள் என கூறி, சாப்பிட வந்தவர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் பங்குதாரராக சேர்த்து ஓட்டலை விரிவுபடுத்தலாம் என தெரிவித்துள்ளனர். இதனை உண்மையென நம்பியவர்களிடம் பல லட்சம் பணத்தை வாங்கினர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் திடீரென ஓட்டலுக்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். பணம் கொடுத்தவர்கள் விசாரித்தபோது, அவர்கள் ஓட்டலில் வேலை செய்தவர்கள், உரிமையாளர்கள் இல்லை என்பது தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்றபோது, வீட்டை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் பணம் கொடுத்து ஏமாந்த சந்தோஷ் உள்பட 14 பேர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியிடம் புகார் கொடுத்தனர். இதில், ரூ.1 கோடியே 25 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவரிடம் பணத்தை வாங்கி, லாபத்தொகை என இன்னொருவரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. பரணிகுமாரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால், வீட்டிலிருந்து பொருட்களை ஏற்றிசென்ற வாகனத்தின் நம்பரை வைத்து விசாரித்தனர். இதில்,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றனர். அங்கு கைக்குழந்தை மற்றும் காதல் மனைவியுடன் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பரணிகுமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்திலும் இதே போல மோசடி செய்த பரணிகுமார், அங்கிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவானார். பணம் செலுத்தியவர்களுக்கு அவர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, நேராக சேலத்திற்கு வந்து ஓட்டலில் வேலை செய்துள்ளார். தம்பதியர் ஆடம்பரமாக வாழ மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

The post வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Salem ,Nandakumar ,Madurai ,Visakhapatnam, AP ,Paranikumar ,Salem ,Vijayalawanya ,Hideaway ,Andhra ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...