காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 72 பேர் அரசுப்பணியில் சேர்ந்திருப்பதாக துணை ஆட்சியர் யோகஜோதி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாக கருத்தரங்க கூடத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா, குரூப் 2 இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் லலிதா, இளநிலை உதவியாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் துணை ஆட்சியர் யோகஜோதி பேசுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவசமாக பயிற்சி பெற்று இதுவரை 72 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். இதற்கு காரணம் அனுபவம் மிக்க பயிற்சியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பணியாளர்களும் ஆவர்.
குரூப் 4 தேர்வில் 15 பேர், குரூப் 2 தேர்வில் 8 பேர், காவல்துறை உதவி ஆய்வாளர், காவலர் என இதில் பயிற்சி பெற்று அரசுப்பணியில் இணைந்துள்ளனர். கடின உழைப்பு, நேரம் தவறாமை, குடும்பத்தின் ஒத்துழைப்பு இருந்தால் யாரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சாதிக்கலாம் என்றார். விழாவில் பயிற்சியாளர்கள், போட்டித் தேர்வர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அலுவலக உதவியாளர் செந்தில் நன்றி கூறினார்.
The post வேலைவாய்ப்பு அலுவலகத்தால் 72 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்: காஞ்சி துணை ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.