×

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

திருப்பூர் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் (29). திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள திருநீலகண்டபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள நூல் கடையில் உள்ள ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே கடையில் மற்றொரு வாகனத்தின் டிரைவராக பணியாற்றி வருபவர் காரைக்குடியை சேர்ந்த வசந்த் (24). இவர்களுடன் மேலும் 4 பேர் என மொத்தம் 6 பேர் ஒரே அறையில் தங்கி உள்ளனர்.

ஆனந்தராஜ் மற்றும் வசந்த் இருவருக்கும் தண்ணீர் பிடித்து வைப்பதில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று இருவரும் மது போதையில் இருந்தபோது தண்ணீர் பிடிக்காமல் இருந்துள்ளனர். ஆனந்தராஜ் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டிய நிலையில் தண்ணீர் பிடித்து வைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வசந்த், தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சண்டையிட்டு கொண்டு வெளியே வேகமாக சென்ற வசந்த் சிறிது நேரம் கழித்து மீண்டும் குடியிருப்பு அருகே வந்துள்ளார்.

அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த ஆனந்தராஜை பார்த்ததும், மேலும் ஆத்திரம் அடைந்த வசந்த் புதிதாக தான் வாங்கி வந்த கத்தியை எடுத்து ஆனந்தராஜ் நெஞ்சு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் தனது ஆட்டோவை நோக்கி சென்று அங்கேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்‌. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் அணில் குமார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். அருகில் இருந்த கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றினர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வசந்தை சம்பவ இடத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வசந்தை வடக்கு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆனந்தராஜ் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே அறையில் இருந்த நண்பனை வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Anandaraj ,Devakota, Sivaganga District ,Thiruppur ,Thirunilakhandapuram ,Kongu Main Road ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் தொடர் குற்ற...