×

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

கடலூர், ஜூலை 7: கடலூரில் பாமக பிரமுகரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில், படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சிவசங்கர் (43). பாமக பிரமுகரான இவர், வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளராக இருந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் சிவசங்கர் தனது வீட்டில் இருந்துள்ளார். மனைவி தனலட்சுமியும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சிவசங்கரின் வீட்டுக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் புகுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவசங்கர் தப்பி ஓடுவதற்குள், 4 பேரும் சிவசங்கரை தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதை பார்த்த மனைவி தனலட்சுமி அலறினார். அதற்குள் 4 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிவசங்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிவசங்கர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிவசங்கரை வெட்டி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சிவசங்கரின் தம்பியான ஆட்டோ ஓட்டுனர் பிரபு என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சிவசங்கரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென திரண்டு சிவசங்கரை கொலை செய்ய முயன்றவர்களை கைது செய்ய வேண்டுமென எனக் கூறி மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த சிவசங்கர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sivasankar ,Surappa Nayakkan Chavadi ,Vanniyar Sangha ,
× RELATED கஞ்சா பொட்டலத்தை தொடர்ந்து கடலூர்...