×

நீலகிரியில் 5 மாத குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 5 மாத குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை பிரேம் கைது செய்தனர். மனைவி துணி துவைக்க சென்றபோது குழந்தை தொடர்ச்சியாக அழுத நிலையில், பிரேம் அடித்துள்ளார். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம், 31; ஊட்டி தனியார் கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரம்யா, 21. பிரேம் வழக்கம் போல் நேற்று காலை 7:00 மணிக்கு பணிக்கு சென்றார். தம்பதியின் ஐந்து மாத பெண் குழந்தையின் கன்னங்கள் சிவந்த நிலையில், எந்த அசைவும் காணப்படாமல் இருந்தது.

இதைப்பார்த்த ரம்யா பயந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஊட்டி பி-1 போலீஸ் ஸ்டேஷனில் ரம்யா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ரம்யா வீட்டின் அருகில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்ததில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு, ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது. போலீசார் பிரேமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post நீலகிரியில் 5 மாத குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Neelgiri ,Nilgiri ,Prem ,Nilgiri district ,
× RELATED வரதட்சணை கொடுமையால் பெண் கொலை...