×

பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்

சென்னை: தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் திருநாளையொட்டி பள்ளி வாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜாமியா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கலந்து கொண்டார்.

தொழுகைக்கு பிறகு பிரசிடெண்ட் அபூபக்கர் அளித்த பேட்டி:
இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து இந்த முறை 5920 இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு உள்ளார்கள். தமிழ்நாடு அரசு இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவு இதற்கு மிக முக்கிய காரணம். இந்த முறை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி ஹஜ் பயணம் செல்வோருக்கு மானியம் அளித்துள்ளார். இது பல்வேறு இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த முறை சவுதி அரேபியா அரசின் தவறான முடிவுகளால் ஹஜ் பயணம் செல்வோர் மிகுந்த சிரமத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து சுமார் 1000 இளைஞர்கள் ஹஜ் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவார்கள். இந்த முறை சவுதி அரசு இதனை ரத்து செய்துள்ளது. சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இது குறித்து அந்நாட்டு அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியாவில் அமலில் இருந்ததால் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் விட்டதால் ஏராளமான ஹஜ் பயணிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழவேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர். ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினர். தொழுகையை முடித்து கொண்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இது மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர்.

பக்ரீத் தொழுகை நடைபெற்ற அனைத்து. தொழுகை முடிந்த பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்ரீத்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல் appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,Chennai ,Pakreet ,Tamil Nadu ,Gurbani ,Bakrit ,
× RELATED தியாகத்திற்கு ஒரு திருநாள்…!