×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி சட்டப்பேரவை முன்கூட்டியே 20ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுவதால் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 24ம் தேதிக்கு பதிலாக வரும் 20ம் தேதி முன்னதாகவே தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்றும், பேரவை கூட்டம் சுமார் 25 நாட்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14ம் தேதி தொடங்கும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, வருகிற 24ம் தேதி தொடங்கி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே நடத்துவது குறித்து சபாநாயகர் அப்பாவு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலியில் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 24ம் தேதி நடைபெறுவதாக அறிவித்த சட்டப்பேரவை கூட்டம் முன்கூட்டியே, அதாவது வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். இன்று காலை 11 மணி அளவில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.

சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை தலைவர் அலுவலகத்தில் நான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன். 12 மணிக்கு அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, வருகிற 20ம் தேதி முதல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ளலாம், எந்தெந்த தேதியில் என்னென்ன மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி சட்டப்பேரவை முன்கூட்டியே 20ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல் appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Speaker ,Appavu ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,
× RELATED அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்