×

துணியை காய வைத்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி சங்கராபுரம் அருகே சோகம்

சங்கராபுரம், ஜூன் 10: குளித்து விட்டு துண்டை காய வைத்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேல்சிறுவள்ளூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு(38), பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி சரளா(30). இவர்களுக்கு கீர்த்தனா (13), மேகா (6) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில் போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மீட்டர் பெட்டியிலிருந்து கொடி கம்பியில் மின்சாரம் பாய்ந்து ராமு அலறி துடித்தார்.இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சரளா அவரை காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடபொன்பரப்பி போலீசார் மின்சாரம் தாக்கி இறந்த கணவன், மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துணியை காய வைத்த போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி சங்கராபுரம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Ramu ,Melsiruvallur Mariamman temple street ,Sankarapuram, Kallakurichi district ,
× RELATED கஞ்சா வைத்திருந்தவர் கைது