×

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ1.64 கோடிக்கு சமரச தீர்வு: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

திருவாரூர், ஜூன் 9: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பில் சமரசத் தீர்வு காணப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிபதி செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மக்கள் நீதிமன்றமானது ஆணை குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வமுத்துகுமாரி தலைமையில் நடைபெற்றது. மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் முன்னிலைவகித்தார். இதில் சார்பு நீதிபதி கிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி விஜய் ஆனந்த், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மகேந்திரவர்மா மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றமானது நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 73 வழக்குகள் கோப்பிற்கு எடுக்கப்பட்டு அதில் சிவில், ஜீவானம்சம் வழக்குகள், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வார கடன் உட்பட மொத்தம் 643 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வுத் தொகையாக ரூ.1 கோடியே 64 லட்சத்து 14 ஆயிரத்து 471க்கு சமரச தீர்வு காணப்பட்டதாக மாவட்ட முதன்மை நீதிபதி செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளார்.

The post தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ1.64 கோடிக்கு சமரச தீர்வு: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல் appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Chief District ,Tiruvarur ,District Principal Judge ,Selvamuthukumari ,People's Court ,Tiruvarur district ,District Legal Affairs Commission ,Tiruvarur District Integrated Court ,District ,Chief Judge ,Dinakaran ,
× RELATED தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,049...